வீட்டுக்கு வீடு - கட்டுரை
--------------------------
'அப்படி என்னங்க கதை கவிதைன்னு எழுதிக்கிட்டு, பாட்டு பாடிக்கிட்டு , பேசாம பேரன் பேத்தியோடு விளையாடுங்க . அதுக்கு மேலே என்ன சந்தோசம் வேண்டிக் கிடக்கு. '
'இல்லேம்மா , நமக்கும் ஒரு சொந்த சந்தோசம் கிடைக்குதே '
'சொந்த சந்தோசம்னு சொல்றதெல்லாம் சும்மா. யாருக்காக , எதுக்காக இதெல்லாம் செய்யணும். யாராவது பாராட்ட மாட்டங்களாங்கிற ஆசை தவிர வேற என்ன. '
'தேவையா அந்த ரெண்டு மூணு எமோஜி. ஒரு கமெண்ட் . இனிமே இதை வச்சு சம்பாதிக்க முடியாது. ஏதோ புள்ளைங்க கொடுக்கிற காசு போதும் , அதுங்களுக்கு ஒத்தாசையா வேற என்ன கேட்குதுங்க. அதுங்க புள்ளைங்களைப் பாத்துங்குக்கன்னுதானே . அதுவும் ஒண்ணொண்ணும் பண்ணுற அட்டகாசம் பார்க்க எவ்வளவு சந்தோசம்.அதை விட்டுட்டு . '
'அதுவும் சிறுசு , நைசா நம்மளை பார்த்துக்கிட்டே போயி பைப்பை திறந்து விட்டு தண்ணியிலே கையை காண்பிக்கிறப்போ , அதைக் கொஞ்ச நேரம் ரசிச்சுட்டு, அப்புறம் ' வேண்டாம்டி கண்ணு ' ன்னு தூக்கி வச்சு அதோட வேற விளையாட்டு விளையாடற சுகம் எப்படி.'
' இந்தப் பாரு , தண்ணியிலே விளையாடறா. தூக்குன்னு ' பொண்ணுகிட்ட சொல்லிட்டு ரூமுக்குள் போயி கதவைச் சாத்திக்கிட்டு பாட்டு என்ன வேண்டிக் கிடக்கு '
'அதுதான் அதுக பாத்துக்கிறதுகளேம்மா , அப்புறம் என்ன, அவங்களுக்கும் பொறுப்பு வர வேணாமா '
'அதெல்லாம் பொறுப்பு இல்லாமலா நம்மளை இந்த அளவு
பாத்துக்கிறதுக . ஏதோ நம்மளை வளர்த்த மாதிரி அதுக புள்ளைங்களையும் பார்த்துக்கணும்னு எதிர் பார்ப்பு. இது கூட இருக்கக் கூடாதா .'
' இந்த இசை புதிது குழுவில் அட்மின் மேடத்தைப் பாருங்க. எம்புட்டு இசை ஞானம் . குரல் வளம். இருந்தும் பேரன் பேத்திகளைப் பார்த்துட்டு ராத்திரியிலே டைம் கிடைச்சா வந்து எல்லோரையும் பாராட்டிட்டு , அப்புறமா ஒண்ணோ ரெண்டோ பாட்டு பாடுறாங்க. அப்படி இருக்கணுங்க குடும்பத்தைப் பார்த்துக்கிற சமத்து' .
'இப்ப என்ன பண்ணனும்கிறே , என்னோட பாடுற , எழுதுற ஆசையை எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு , குழந்தைகளோடவே நாள் முழுக்க இருக்கணும்கிறாயா . '
'அப்படி எல்லாம் அரைகுறை விருப்பத்தோடு இருக்கக் கூடாது. முழுசா அதுகளை ரசிச்ச விளையாடுற ஆசைதான் முதல் ஆசையாய் இருக்கணும். இன்னும் எத்தனை வருஷம் இருக்கப் போறம் நாம '.
'போனப்புறம் , ஒருநாள் துக்கம் விசாரிச்சிட்டு, மறுநாளே அவங்கவங்க வேலை இந்தக் குழு நண்பர்களுக்கு. நம்ம பசங்கள் தான், நம்ம அதுங்க புள்ளைங்களோட விளையாண்டதை, பார்த்துக்கிட்டதை ஆயுசு முழுக்க நினைச்சிட்டு இருக்கப் போறாங்க. '
'உங்க ஆசையை மூட்டை கட்டி வைங்கன்னு சொல்லலே. அதனாலே உண்மையான சந்தோசம் கிடைக்காது . பேரன் பேத்திகளோட விளையாடுறது தான் உண்மையான சந்தோசம். வாழ்க்கையின் ஆரம்பத்திலே இருந்துக்கிட்டு , நம்மோட சிரிச்சு விளையாடற அனுபவத்துக்கு ஏங்கிகிட்டும். அது கிடைக்காட்ட, ஏதோ டி வி யிலே வர ஆட்டம் பார்த்து ஆடிக்கிட்டும் இருக்கிற அந்தச் சிறுசுகளைப் பார்க்க பாவமா இல்லையா. '
' வேலை வேலைன்னு நமக்கும் சேர்த்து சம்பாதிச்சுக்கிட்டு இருக்கிற நம்ம புள்ளைங்களைப் பார்க்கிறப்பவும் பாவமா இல்லையா. அதுக தூங்கிற நேரத்திலே , தூக்கம் வராம புரண்டுகிட்டு கிடக்கிறீங்களே . அப்ப பாடுங்க, எழுதுங்க . உங்களுக்கும் சந்தோசம், குழு நண்பர்களும் தூங்கிக் போயிடுவாங்க . அவங்களுக்கும் சந்தோசம் . '
'யோசிச்சா சரியாதான் தோணுதும்மா. ஆனா,பகலிலே, மொபைல்லே பதில் போட்டுக்கிட்டு, பாடிக்கிட்டு இருக்கிற அந்த சந்தோசம் போச்சேம்மா. '
'ஏதோ ஆசை கூடாதுன்னு வாய் கிழிய கவிதை எழுதுறீங்களே. இந்த சின்னச் சின்ன ஆசைகளை அடக்கி மடக்கி வச்சிட்டு, பேரன் பேத்திகளோட விளையாண்டு, பேசிக்கிட்டு , இருந்து பாருங்க. இந்த மத்தவங்க பாராட்டுக்கு ஏங்கிற ஆசை ஓடியே போயிடும். அதுங்க சிரிப்பைப் பார்க்கிற ஆசை கூடிப் போயிடும். குறையவே குறையாது .'
'குட்டிப் பொண்ணு , இங்கே வந்து உட்காரு. அண்ணனோட கேரம் விளையாட்டு ஆடப் போறேன். வா வந்து கேரம் காயின் எல்லாம் கலைச்சுப் போடு ' . நம்ம வம்பு நம்மை விட்டுப் போகாதில்ல .
'இது சமத்து பையனுக்கு அழகு ' என்று காதில் கிசுகிசுத்துப் போன மனைவியைக் காதல் பார்வையோடு பார்க்கும் போது . 'தாத்தா , இங்கே பாருங்க, தங்கச்சி காயின் எல்லாம் கலைச்சுப் போட்டுட்டா ' என்று அழ ஆரம்பிக்க, அதைப் பார்த்து குட்டிப் பொண்ணு பொக்கை வாயோட சிரிக்க , 'உங்க பாடு' என்று சிரித்தபடி ரூமுக்குள் சென்று தனது ஆன்லைன் மீட்டிங்கில் தனது பணி தொடர்பாக நிம்மதியாக ஆங்கிலத்தில் உரையாடச் சென்று விட்ட பெண்ணைப் பெருமையோடு பார்த்தாள் மனைவி .
மொபைலில் நோட்டிபிகேஷன் மெசேஜ். ' என்ன சார் உங்க பாட்டை இன்னிக்குக் காணோமே'
------------------------நாகேந்திர பாரதி
My Poems in Tamil and English are available